வங்களாதேசிடம் வீழ்ந்த இங்கிலாந்து!

Friday, March 11, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று சிட்டகாங்கியில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காள தேசம் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, வங்காள தேச அணியின் பந்து வீச்சில் ரன் எடுக்க திணறினர்.

இறுதியில் 49.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டிராட் 99 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 67 ரன்களும், மோர்கன் 72 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் ஷகிப் அல் ஹசன், நயீம் இஸ்லாம், அப்துர் ரசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் களம இறங்கிய வங்க தேசம் அணி 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இம்ருல் கேயஸ் 60 ரன்கள் (100 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார்.

தொடக்க வீரர் தமிம் இக்பால் 38 ரன்கள் எடுத்தார். வங்காள தேச அணி 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் 9-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய மக்முதுல்லா, ஷபியுல் இஸ்லாம் ஜோடி 58 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

ஷபியுல் இஸ்லாம் 24 ரன்களும் மக்முதுல்லா 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்

"நம்பர்-1' அணியில் இருப்பது பெருமை: சச்சின்

Monday, January 31, 2011

"கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையிலான இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் உள்ளது. இதில், இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள், டெஸ்டில் 50 சதம் அடித்து அசத்தியவர் இந்திய சாதனை பேட்ஸ்மேன் சச்சின். இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரர் மற்றும் ஸ்பெஷல் டெஸ்ட் வீரர் என்ற விருதை, "காஸ்டிரால்' நிறுவனம் வழங்கியது.

இதற்கு முன் கடந்த 2009ல், இதே நிறுவனம் வழங்கிய சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் பெற்றுள்ளார். இவர் தவிர, தோனி, ஹர்பஜன், டிராவிட், யூசுப் பதான் ஆகியோரும் விருது பெற்றனர்.

விழாவில் பங்கேற்ற சச்சின் கூறியது:

இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியை தோற்கடித்து, இந்திய அணி "நம்பர்-1' டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை முதன் முதலாக பெற்றது. அப்போது, இது 30 அல்லது 40 நாட்களுக்குத் தான் நீடிக்கும் என்று, பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அடுத்து வந்த தென் ஆப்ரிக்க தொடரில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தோம். உடனே "நம்பர்-1' இடம் பறிபோகும் என்றனர். ஆனால், இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே இடத்தில் நீடிக்கிறோம். இந்த இடத்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

இதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்துள்ளோம். பயிற்சியாளர் கிறிஸ்டனும் அணியில் வியக்கத்தக்க வகையில் மாற்றம் கொண்டு வந்தார். கடந்த 2007க்கு பின் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இத்தகைய அணியில் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். வயது தடையல்ல: இதுவரை நான்கு முறை காயத்துக்கு "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். இந்த நேரத்தில் அணியில் வருவதும், போவதுமாக இருந்தேன். பின் 2007க்குப் பின் பெரிய அளவில் காயம் எதுவுமில்லாததால், மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டில், நீடிக்க வயது ஒரு தடையே அல்ல. நான் 16 வயதில் போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். இது போல யாரும் எந்த வயதிலும் துவங்கலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம்.

ஆனால் எப்படி விளையாடுகின்றோம் என்பது தான் முக்கியம். இந்த உலக கோப்பை தொடரில் சிலவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன். அது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு சச்சின் கூறினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...

share

Share

feedburner